×

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமனம் தமிழ்நாடு அரசாணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: ஜன. 25க்கு வழக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்கும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணை குறித்து எந்தவித கருத்து கூறவோ அல்லது தற்போது அதற்கு தடை விதிக்கவோ முடியாது என தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜனவரி 25ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், ஆகம விதிகளுக்கு முரணாக கோயில்களில் அர்ச்சகர்கள் மற்றும் பிற ஆகம சம்பந்தப்பட்ட பணியாளர்களை நியமிக்கவோ அல்லது தேர்வு செய்வதையோ சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கம் உட்பட சில அமைப்புகள் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ”ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோயில்களில் அர்ச்சகர் நியமனம் ஆகியவற்றில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளை தமிழ்நாடு அரசு மீறி வருகிறது. மேலும் கடந்த 50ஆண்டுகளாக இருக்கும் ஆகம வழக்கத்தை மாற்றி விட்டு எப்படி புதிய விதிமுறைகளை கோயில் விவகாரத்தில் மேற்கொள்ள முடியும். மேலும் இது எங்களது அடிப்படை உரிமையாகும். அதனால் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றியமைக்க வேண்டும் என தெரிவித்தனர்.

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன், ‘‘இந்த விவகாரத்தில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுகுறித்து முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசாணையின்படி அர்ச்சகர்களை நியமனம் செய்ய எந்தவித தடையும் விதிக்க கூடாது. மேலும் இதுதொடர்பான பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்திலும் விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது. இதில் குறிப்பாக தமிழ்நாடு சார்ந்த அனைத்து விவரங்களையும் உயர்நீதிமன்றத்திற்கு நன்றாக தெரியும் என்பதால் வழக்கை உயர்நீதிமன்றமே தொடர்ந்து விசாரிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய வேண்டாம் என தெரிவித்தார்.

இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘இந்த விவகாரத்தில் தற்போது எந்தவித கருத்தை கூறவோ அல்லது தடை விதிக்கவோ நாங்கள் விரும்பவில்லை. இருப்பினும் உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் விசாரணைக்கு வரும்போது இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக மனுதாரர்கள் தரப்பில் அங்கு தெரிவிக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் ஜனவரி 25ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

The post அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமனம் தமிழ்நாடு அரசாணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: ஜன. 25க்கு வழக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Tamil Nadu ,New Delhi ,Tamil Nadu government ,
× RELATED வாக்காளர் ரகசியம் மீறப்படுவதாக...